கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஸ்டேட் பேங்க் அருகே 2482 என்ற பதிவெண் கொண்ட அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. இக்கடையில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மதுபாட்டில்கள் விற்பனை செய்த பணத்தில் சுமார் 23 ஆயிரம் ரூபாய் குறைவு ஏற்பட்டுள்ளதால், முறைகேடு செய்துள்ளதாக தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கடலூர் மாவட்ட உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், மேற்பார்வையாளர் ரவி, விற்பனையாளர்களான ரமேஷ், குப்புசாமி, வீரசேகர், வேல்முருகன் ஆகிய 5 பேரையும், கடந்த 13-ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்தனர்.
இந்நிலையில் அக்கடையில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் வராத நிலையில், வழக்கம் போல் இன்று காலை மதுபானக் கடையை திறந்து, விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது அக்கடைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட விற்பனையாளர்கள், கடைக்குள் சென்று பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் கணக்கு வழக்குகளை ஒப்படைத்து விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விற்பனையாளரான ரமேஷ் என்பவர் மேற்பார்வையாளர் உத்தரவின்றி கணக்கு வழக்குகளை காண்பிக்க முடியாது என்று கூறியுள்ளார். இதனால் புதிய விற்பனையாளர்கள் ரமேஷை உள்ளே வைத்து பூட்டு போட்டு பூட்டினர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாச்சலம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது மதுபான கடையில் உள்ளே இருந்த ரமேஷ் கைகளுக்கு பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த சானிடைசரை குடித்து தற்கொலை செய்து கொள்வதாக கூறினார். உடனடியாக காவல்துறையினர் மதுபானக்கடையை திறந்து உள்ளே ரமேஷ் வைத்திருந்த சானிடைசர் கேனை பறிமுதல் செய்தனர்.