விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் பாதிப்படைந்துள்ளது எனவே அரசு உடனடியாக உதவி செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..
விநாயகர் சதுர்த்தி பெருவிழா வருடந்தோறும் தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற செப்டம்பர் – 10 ந் தேதி, ஆவணி மாதம் 25ம் தேதி, வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்துக்களிடையே சாதி, பொருளாதார ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளை களைந்து அனைவரையும் ஒருங்கிணைக்கும் “இந்து ஒற்றுமை விழா” வாக நடத்தப்படுகிறது. ஆன்மீகத்தை, பக்தியை, நம்பிக்கையை அடிப்படையாக வைத்து மக்களை ஒன்று திரட்ட சுதந்திர போராட்ட காலத்தில் பாலகங்காதர திலகரால் துவக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழா – ஊர்வலங்கள் தமிழகத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக நடந்து வருகிறது. இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து இயக்கங்களால் விநாயகர் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விழாக்கள், ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன.
“வீதி தோறும் விநாயகர் – வீடு தோறும் விநாயகர் ” என்ற இலக்குடன் தமிழகத்தில் இந்த ஆண்டு 1 லட்சம் விநாயகர் திருமேனிகளை பிரதிஷ்டை செய்ய இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் துவக்கப்படும். இந்த ஆண்டும் பணிகள் துவங்கிய சில நாட்களிலே கொரோனா நோய் பரவல் அதிகரித்து நாடு முழுவதும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மக்களை பாதுகாப்பதற்காக, நோய் தொற்றை தடுப்பதற்காக அரசாங்கம் பல கட்டங்களாக ஊரடங்கு அமுல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள தற்போதைய சூழலில் மூலப்பொருட்களின் கடும் விலை உயர்வினால் தயாரிப்பாளர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
பொருளாதார ரீதியில் மிகுந்த சிரமத்தில் உள்ள விநாயகர் சிலை தயாரிப்பாளர்களுக்கு வங்கிகள் மூலம் குறுகிய கால கடன் வழங்குவதோடு, தமிழக அரசும் நிதி உதவி செய்ய வேண்டும்.விநாயகர் சதுர்த்தி பெருவிழா – ஊர்வலங்கள் சிறப்பாக நடைபெறும் வகையில் அரசு அனைத்து உதவிகளையும் செய்து தந்திட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது/