டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வட்டு எறிதலில் இந்தியாவின் வினோத் குமார் வெண்கலம் வென்ற நிலையில் அவருடைய பதக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற ஆடவா் வட்டு எறிதல் எஃப் 52 பிரிவில் 19.91 மீ தூரம் எறிந்து மூன்றாவது இடத்துடன் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினாா் இந்திய வீரா் வினோத் குமாா். 41 வயதான வினோத் குமாா் இதில் புதிய ஆசிய சாதனையையும் நிகழ்த்தினார். வினோத் குமாா் இரண்டாவது முயற்சியில் 18.32 மீட்டரும், மூன்றாவது முயற்சியில் 17.80 மீட்டரும், அடுத்த முயற்சியில் 19.12 மீட்டரும் எறிந்தாா். 5-ஆவது முயற்சியில் 19.91 மீ தூரம் எறிந்து வெண்கலம் வென்றாா்.
இந்நிலையில் இப்போட்டியின் முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டது. தொழில்நுட்பக் குழுவினர் எடுத்த முடிவின்படி வினோத் குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. எஃப் 52 பிரிவில் பங்கேற்க வினோத் குமார் தகுதி பெறவில்லை என தொழில்நுட்பக் குழு அறிவித்துள்ளது.