விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 இடங்களில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்தும், தடையை நீக்க வலியுறுத்தியும் இந்து முன்னணியினர் மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சாமிநாதன் தலைமை தாங்கினார். இதில் இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர். டாஸ்மாக் கடை, சினிமா தியேட்டர் ஆகியவை செயல்படவும், பள்ளி, கல்லூரிகள் திறக்கவும் அனுமதி அளிக்கும் தமிழக அரசு விநாயகர் ஊர்வலத்திற்கும், விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்துவதற்கும் அனுமதி வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல் அடியாமங்கலம், அய்யாரப்பர் மேலவீதி, நல்லத்துக்குடி, ஐவநல்லூர், மன்னம்பந்தல் உள்பட மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 இடங்களில் கோவில்கள் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.