0 0
Read Time:5 Minute, 43 Second

தண்ணீரில் டெல்டா…! கண்ணீரில் விவசாயிகள் – திருவாரூரில் 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது!

’’திருவாரூர் மாவட்டம் கோட்டூர், கலப்பால், ராயநல்லூர், வேதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுக தொடங்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை’’.

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி, என மூன்று போகம் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டூர் அணை திறக்கப்படாத காரணத்தினால் மூன்று போக சாகுபடி என்பது ஒரு போக சம்பா சாகுபடியை மட்டும் விவசாயிகள் செய்து வந்தனர். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் காரணமாக குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் காரணத்தினால் டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் 70 சதவீதம் ஆற்று பாசனத்தை நம்பியும், 30 சதவீதம் ஆழ்துளை கிணறுகளை நம்பியும் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் ஆழ்துளை கிணறுகள் மூலமாக சாகுபடி பணியில் ஈடுபட்ட விவசாயிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாங்கள் பயிரிட்ட நெல் பயிர்களை அறுவடை செய்ய தொடங்கினர். அதே நேரத்தில் ஆற்றுப் பாசனத்தை நம்பி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இன்னும் ஒருசில தினங்களில் அறுவடை பணிகளை தொடங்க இருந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக திருவாரூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கி உள்ளது.

குறிப்பாக திருவாரூர் மாவட்டம் கோட்டூர், கலப்பால், ராயநல்லூர், வடபாதிமங்கலம், வேதபுரம், விக்கிரபாண்டியம், உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுக தொடங்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டம் கிடையாது என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்து விட்டது. இதனால் தாங்கள் பயிரிட்ட நெல் பயிர்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப் பட்டால் தங்களுக்கு பயிர்க்காப்பீட்டை நம்பியே விவசாயிகள் இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு பயிர் காப்பீடு இல்லாத காரணத்தினால் தற்பொழுது மழையால் நெற்பயிர்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ள நிலையில் தாங்கள் செலவு செய்த தொகையை எப்படி எடுக்கப் போகிறோம் என்ற ஏக்கத்தில் விவசாயிகள் உள்ளதாக தெரிவிக்கின்றனர். உடனடியாக வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும் மாவட்ட நிர்வாகம் திருவாரூர் மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் குறுவை நெல் பயிர்கள் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை கணக்கெடுப்பு செய்து தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கவேண்டும். தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அப்படி நிவாரணம் வழங்காத பட்சத்தில் அடுத்தகட்ட சாகுபடி பணிகளை தொடங்க முடியாத நிலை உருவாகும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Source: ABP

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %