மயிலாடுதுறை மாவட்டத்தில் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை காவல்துறை சார்பில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் பரிசுகளை வழங்கினார் .
இந்திய சீன எல்லைப் பகுதியில் 1959 – ஆம் ஆண்டு நடந்த மோதலில் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட 20 இந்திய காவலர்கள் வீரமரணம் அடைந்தனர் . அந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் நீத்தார் நினைவு நாள் காவல்துறை சார்பில் கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர்.
தொடர்ந்து மயிலாடுதுறை மணிக்கூண்டு பகுதியில் தொடங்கிய இந்த மினி மாரத்தான் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுமார் ஐந்து கிலோமீட்டர் நடைபெற்ற இந்த மினி மாரத்தான் போட்டியில் காவல்துறையினரும் பங்கேற்று மாணவர்களை ஊக்குவித்தனர்.
இறுதியில் முதல் மூன்று இடம் பிடித்த மாணாவர்களுக்கு காவல்துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் காவல்துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜன், காவல் ஆய்வாளர் செல்வம், எஸ்பி தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் சதீஷ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் காவல் துறையை சார்ந்த அனைத்து பிரிவு காவலர்கள் பங்கேற்றனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.