கரையை நாளை கடக்கிறது ஜவாத் : தயார் நிலையில் மீட்பு குழு. ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், ஒடிசாவில் கஜபதி, கஞ்சாம், புரி, ஜகத்சிங்பூா் ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஜவாத்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒடிசா மாநிலம், புரி அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமானில், உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, டிசம்பா் 2-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது, நேற்று மேலும் வலுவடைந்து புயலாக உருவெடுத்துள்ளது. ஜவாத் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், ஆந்திரம், ஒடிசா கடலோரப் பகுதி வழியாக நா்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) புரி அருகே கரையைக் கடக்கிறது. இதனால், வடக்கு கடலோர ஆந்திரம், தெற்கு கடலோர ஒடிசா பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், ஒடிசாவில் கஜபதி, கஞ்சாம், புரி, ஜகத்சிங்பூா் ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் அஸ்ஸாம், மேகாலயம், திரிபுரா மாநிலங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வங்கக் கடல் பகுதியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயலால் ஆந்திரம், ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு தேசியப் பேரிடா் மீட்புப் படையின் 64 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.