0 0
Read Time:3 Minute, 28 Second

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதிக்குட்பட்ட பொன்நகரை சேர்ந்தவர் அர்ஜூனன் என்கிற பனிமலர் (வயது 35). திருநங்கையான இவர், புவனகிரி அருகே உள்ள தையாகுப்பம் புற்று மாரியம்மன் கோவில் தெருவில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்தார்.  இந்த நிலையில் பனிமலர் நேற்று முன்தினம் நள்ளிரவு  சிதம்பரம்  அருகே உள்ள பு.முட்லூரில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இதுபற்றி பரங்கிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பனிமலர் உடலை பார்வையிட்டு, அக்கம்பக்கத்தினரிடம்  விசாரணை நடத்தினர். 

அப்போது பனிமலரை மர்மநபர்கள் கத்தியால் வெட்டி படுகொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பனிமலரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பனிமலரின் உறவினர் முத்தரசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பனிமலரை கொலை செய்தது யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் திருநங்கை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பனிமலர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவர் தனது செல்போன் மூலம் சக திருநங்கைகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் அவர், என்னை சிலர் கத்தியால் வெட்டுகிறார்கள், முகமெல்லாம் வலிக்கிறது. என்னை காப்பாற்றுங்கள் என்று கதறியபடி கூறியிருந்தார். அதனை கேட்ட சக திருநங்கைகள் நீ எங்கு இருக்கிறாய் என்று பனிமலரிடம் கேட்டனர். அதற்கு அவர், நான் முட்லூரில் இருக்கிறேன். சீக்கிரமாக வந்து என்னை காப்பாற்றுங்கள் என்று கூறியபடி செல்போனில் கதறியுள்ளார். அதற்கு சக திருநங்கைகள் நாங்கள் வருகிறோம் என்று கூறினர். பின்னர் மீண்டும் சக திருநங்கைகள் பனிமலரை தொடர்பு கொள்ள முயன்றபோது, செல்போன் சுவிட்ச் ஆப்  செய்யப்பட்டிருந்தது. இதனிடையே சக திருநங்கைகள் சம்பவ இடத்துக்கு செல்லும் முன்பு பனிமலர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த செல்போன் ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைராகி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
100 %
Surprise
Surprise
0 %