0 0
Read Time:3 Minute, 57 Second

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது. அண்மைக்கடல் பகுதியில் அதிகரித்து வரும் மீன்பிடி அழுத்தத்தை குறைத்திடவும், ஆழ்கடல் பகுதியில் செறிந்துள்ள மீன்வள ஆதாரங்களை முறையாக பயன்படுத்திடவும், தூண்டில் மூலம் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள் வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி விசைப்படகினை கட்டும் மீனவர்களுக்கான ஒரு புதிய திட்டத்தினை அறிவித்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், தூண்டில் மூலம் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி விசைப்படகினை கட்டிட படகொன்றிற்காகும் செலவினத்தில் 50 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.30.00 இலட்சம் வரை மீனவர்களுக்கு மானியமாக வழங்கப்படும்.

தமிழகத்தை சார்ந்த முழு நேர மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அதிகபட்சம் 6 பேர் கொண்ட குழுவாகவோ அல்லது மீனவர் கூட்டுறவு சங்கங்கள் அல்லது தனி நபராகவோ இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பப் படிவங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளமான www.fisheries.tn.gov.in -லிருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மீன்வளம் மற்றம் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக நாட்களில் நேரில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பதார் மீன்துறை இணையதளத்தில் உள்ள விரிவான வழிகாட்டு நெறிமுறைகளின் படி பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை ஒருங்கிணைந்த கட்டிடங்கள், 3-வது தளம், கால்நடை மருத்துவமனை வளாகம், 571,அண்ணா சாலை, நந்தனம், சென்னை – 600 035 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 14.02.2022 வரை விண்ணப்பம் அளிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சூரைமீன்பிடி படகின் வரைபடம் தகுதிவாய்ந்த கப்பல் / மீன்பிடி கலன் கட்டுமான வரைவாளரிடமிருந்து (NAVAL ARCHITECT) பெற்று அசலாக கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு மாநில அளவிலான பதிவு எண்ணுடன் கூடிய ஒப்புகை சீட்டு விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும்.

மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் மற்றும் தெளிவுரைகளுக்கு நாகப்பட்டினம் (வடக்கு) இருப்பு சீர்காழி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், அலுவலகத்தினை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவிக்கிறார்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %