0 0
Read Time:3 Minute, 6 Second

தரமான சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புவனகிரி-சேத்தியாத்தோப்பு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புவனகிரி பேரூராட்சிக்குட்பட்ட 15-வது வார்டு பெருமாத்தூர் கிராமத்தில் கடந்த மாதம் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை அமைக்கப்பட்டு, ஒரு மாதத்துக்குள் முற்றிலும் சேதமடைந்து போனது. இதனால் பாதிக்கப்பட்ட பெருமாத்தூர் பொதுமக்கள் தரமற்ற சாலையை சீரமைக்க வேண்டும் என புவனகிரி பேருராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை புவனகிரி-சேத்தியாத்தோப்பு சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு திரண்டு வந்தனர்.

பொதுமக்கள் மறியல்:

பின்னர் அவர்கள் தரமற்ற சாலை அமைத்ததை கண்டித்தும், புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷம் எழுப்பியபடி திடீரென சாலையில் அமர்ந்தபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் மற்றும் பேரூராட்சி தலைமை எழுத்தர் லோகேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அரசு பணம் வீண்:

அப்போது பொதுமக்கள் கூறுகையில், ரூ.90 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட தார் சாலை ஒரே மாதத்தில் சேதமடைந்து விட்டது. இதனால் அரசு பணமும் வீணாகி விட்டது. ஆகவே, மேற்கண்ட சாலையை புதிதாகவும், தரமாகவும் அமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதைகேட்ட அதிகாரிகள், இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் பேசி விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனை ஏற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் புவனகிரி-சேத்தியாத்தோப்பு சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Source:thanthi

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %