0 0
Read Time:3 Minute, 25 Second

தூங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் மகனை இரும்புக் கம்பியால் தாக்கி, நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள குணமங்கலத்தை சேர்ந்தவர் விருத்தகிரி. இவருடைய மனைவி பிரேமா(வயது 54). இவர்களுடைய மகன்கள் கொளஞ்சிமணி, சக்திவேல்(24). விருத்தகிரி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். கொளஞ்சிமணி சென்னையில் வசித்து வருகிறார். சக்திவேல், பிரேமாவுடன், குணமங்கலத்தில் வசித்து வருகிறார். மேலும் இவர்கள் தங்கள் வீட்டின் முன்பு பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரேமா மற்றும் சக்திவேல் கடையை பூட்டிவிட்டு கடைக்கு உள்ளேயே தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் திடீரென கடை கதவு உடைக்கும் சத்தம் கேட்டது. இதில் திடுக்கிட்டு எழுந்த பிரேமா, வெளியே செல்வதற்குள் மர்மநபர்கள் 2 பேர் கதவை உடைத்துக்கொண்டு கடைக்குள் புகுந்தனர்.

தாய்-மகன் மீது தாக்குதல்

பின்னர் பிரேமா கழுத்தில் கிடந்த நகையை அவர்கள் பறிக்க முயன்றனர். ஆனால் பிரேமா, நகையை கையால் பிடித்துகொண்டு சத்தம் போட்டார். இந்த சத்தம் கேட்டு சக்திவேல் எழுந்து வந்தார். உடனே மர்மநபர்கள் தங்களது கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால், பிரேமாவையும், சக்திவேலையும் தாக்கினர். பின்னர் பிரேமா கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

வலைவீச்சு

இதுபற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் சுபிக்‌ஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேமா சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். சக்திவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். நள்ளிரவில் தாய்-மகனை தாக்கி நகை பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %