0 0
Read Time:5 Minute, 55 Second

தஞ்சை மாவட்டத்தில் வைக்கோல் கட்டு ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஆண்டு தோறும் ஜூன் மாதம் திறக்கப்படுவது வழக்கம்.

அப்படி வழக்கம்போல் தண்ணீர் திறக்கப்பட்டால் அந்த தண்ணீர் கல்லணைக்கு வந்தவுடன் அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். சம்பா, தாளடி சாகுபடியும் அதிக பரப்பளவில் நடைபெறும். அதன்படி கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி அதிக அளவில் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து சம்பா, தாளடியும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி அதிக அளவில் நடைபெற்றது. தற்போது அறுவடை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அறுவடை முடிந்த வயல்களில் வைக்கோல்கள் கிடக்கின்றன.

அறுவடையின்போது நெற்கதிர்கள் தனியாகவும், வைக்கோல் தனித்தனியாகவும் பிரித்தெடுக்கப்படும். ஈரப்பதம் உள்ள வைக்கோலை விவசாயிகள் வயல்வெளிகளில் உலர வைப்பார்கள். இந்த வைக்கோலை விவசாயிகள் சேகரித்து, போர் போட்டு அடைத்து வைத்து, தேவைப்படும்போது கால்நடைகளுக்கு பயன்படுத்துவது தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

வைக்கோல் போர் வைப்பதற்காகவே விவசாயிகள் தங்களது வீடுகளுக்கு பின்புறம் இடத்தை ஒதுக்கி வைத்து இருப்பார்கள். அடைமழை பெய்தால் கூட வைக்கோல் போருக்குள் ஒரு சொட்டு தண்ணீர் கூட இறங்காது. ஆனால் இன்றைக்கு வைக்கோல் போர்களை பார்ப்பது அரிதாகிவிட்டது. அந்த அளவுக்கு வேலை செய்ய தற்போது தொழிலாளர்கள் கிடைப்பதில்லை.

இந்த பிரச்சினைக்கு தீர்வாக வயலில் நெல் அறுவடைக்கு பின் வைக்கோலை சேகரித்து தனியாக கட்டாக கட்டி அடுக்கி வைக்கின்றனர். உழவு பணிக்கு மாடுகளுக்கு பதிலாக டிராக்டர்கள் அதிகஅளவு பயன்படுத்தப்படுகின்றன. நாற்றுநடவு செய்யும் எந்திரம், அறுவடை செய்யும் எந்திரம், விதையிடும் கருவி என பல்வேறு வகையான கருவிகள் புதிது, புதிதாக வந்துள்ளன.

முன்பெல்லாம் வைக்கோலை கட்டாக கட்டுவதற்கு தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். ஆனால் வைக்கோலை சேகரித்து தனியாக கட்டாக கட்டுவதற்கும் தற்போது எந்திரம் வந்துவிட்டது. கூலி வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில் பல சிக்கல்கள் இருப்பதால் வைக்கோல் கட்டும் எந்திரத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் சூரக்கோட்டை பகுதியில் அறுவடை முடிந்த வயல்களில் கிடந்த வைக்கோல்களை கட்டாக கட்டும் பணி நடைபெற்றது. டிராக்டர் மூலம் இணைக்கப்பட்ட சிறிய எந்திரம் மூலம் வைக்கோலை சுருட்டி கட்டுகளாக கட்டப்பட்டன. அறுவடை முடிந்த வயல்களில் எல்லாம் வைக்கோல்கள் கட்டாக கட்டப்பட்டு கிடக்கின்றன. இதனை கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள், வியாபாரிகள் வந்து வைக்கோல்களை விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நெல் அறுவடை நடைபெற்று வருவதால் வைக்கோல் விலை குறைவாகத்தான் உள்ளது. கடந்த ஆண்டு 1 கட்டு ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது 1 கட்டு ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வைக்கோல் கட்டுவதற்கு கட்டு ஒன்றுக்கு ரூ.45 வரை விலை கொடுக்க வேண்டி உள்ளது. கடந்த ஆண்டு ஒரு கட்டுக்கு ரூ.40 தான் கொடுத்தோம். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் தான் ஏற்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகள் தான் தற்போது அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். வெளியூரை சேர்ந்த வியாபாரிகள் பெருமளவில் வருவதில்லை. என்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %