0 0
Read Time:4 Minute, 12 Second

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரம் நடுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி விமலா. இவர்களுடைய மகள் அஜினாதேவி (வயது 21), மகன் அஜித்.
அஜினாதேவி சிதம்பரம் அருகே வாண்டியாம்பள்ளம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து சி.முட்லூரில் உள்ள சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் முதலாமாண்டு படித்து வந்தார்.

அஜினாதேவி கடந்த 16-ந்தேதி விடுமுறைக்காக பெற்றோர் வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்தது முதல் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் அஜினாதேவி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைபார்த்து அதிா்ச்சி அடைந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சுந்தரம், அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஜினாதேவியின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவர் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் ஒரு கடிதமும் இருந்தது.

அந்த கடிதத்தில், ‘மன்னிச்சிடு அம்மா எனக்கு வேற வழி தெரியல. ஒருத்தன் நான் குளிக்கிறதை வீடியோ எடுத்து என்னை பிளாக்மெயில் பண்றான். அவன் கிட்ட இருந்து நான் தப்பிக்க எனக்கு வேற வழி தெரியல, என்னை மன்னித்துவிடு. தம்பியை நல்லா பார்த்துக்கோ. எனக்கு ரொம்ப நாள் வாழனும்னு ஆசை. ஆனா என்ன பண்ண, கடவுள் என்னை வாழ விடல. எனக்கு வேற வழி இல்லை. விஜய், அஜித்கிட்ட மாமாகிட்ட சொல்ல வேணாம்னு சொல்லுமா’ என எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். மேலும் அஜினாதேவியின் செல்போனை சோதனை செய்தபோது, அதில் 3 எண்கள் அழைப்புகள் வராதவாறு பிளாக் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து அந்த எண்கள் கொண்ட நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இறந்துபோன அஜினாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி குளித்ததை வீடியோ எடுத்து மிரட்டியவர் யார்? என்பது குறித்தும், மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணமா? என்றும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளித்ததை வீடியோ எடுத்து மிரட்டுவதாக கடிதம் எழுதிவிட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிதம்பரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %