தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி 5 லட்சம் மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொள்ளிடம், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி 5 லட்சம் மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ஒன்றிய தலைவர் சிங்காரவேலு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சங்கர் வரவேற்றார். பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு விருது மற்றும் கேடயங்களை வழங்கி பேசினார்.
கூட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தாஸ் கலந்துகொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தமிழக ஆசிரியர்களுக்கு நல்ல பல திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்து வருகிறார்.பெண் பிள்ளைகள் உயர் கல்வி படிக்க மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதாக அறிவித்துள்ளார்.
சென்னையில் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவது போல் கிராமங்களில் உள்ள பள்ளிகளிலும் வழங்க வேண்டும். பள்ளிக் கல்வி துறைக்கு தமிழக அரசு ரூ.36 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பள்ளிகளின் கட்டமைப்பு வசதி உருவாக்குவதற்கும் நிதி ஒதுக்க வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 5 லட்சம் மாணவ-மாணவிகள் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் கணினி, நூலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளதால் தனியார் பள்ளிகளில் இருந்து அதிக அளவில் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.