0 0
Read Time:5 Minute, 56 Second

இந்தியாவில் அனைவருக்கும் ஒரே கடவுள் சிவன். மதத்தால், மொழியால் பிரிந்து இருந்தாலும் இந்தியர்கள் அனைவரும் ஒரே குடும்பம்தான் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

மயிலாடுதுறை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் கவர்னருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கோ பூஜை, கஜ பூஜை செய்து சாமி மற்றும் அம்பாள் சன்னதிகளில் கவர்னர் தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து காரில் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு சென்றார். அங்கு தருமபுர ஆதீனம் வாசலில் கவர்னருக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சாமிகளை கவர்னர் நேரில் சந்தித்து ஆசி பெற்றார். கவர்னருக்கு தருமபுரம் ஆதீனம், நடராஜர் உருவச்சிலையை வழங்கினார்.
இதனையடுத்து தருமபுரம் ஆதீனத்தில் தமிழர்களின் பழமையை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பழங்கால அருங்காட்சியகத்தை கவர்னர் திறந்து வைத்ததுடன், பவளவிழா அரங்கத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
பின்னர் நடந்த விழாவில் கவர்னர் பேசியதாவது:-

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதால் தருமபுரம் ஆதீனத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இங்குள்ளவர்களை பார்க்கும்போது உண்மையான இந்தியா என் கண்முன்னே தெரிகிறது. தருமபுர ஆதீனம், நாட்டு மக்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றி வருவது சிறப்புக்குரியது.

குறிப்பாக இக்கட்டான சூழ்நிலைகளில், கொரோனா போன்ற இயற்கை இடர்பாடுகள் மற்றும் கார்கில் போர் நடந்தபோது தாமாக முன்வந்து பல்வேறு உதவிகளை செய்தது பாராட்டுக்குரியது. இந்தியாவின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாமல், கலாசாரம், பண்பாடு, நாகரிகம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது.

உலகில் உள்ள மக்கள் இயற்கை இடர்பாடுகள், ஒருவருக்கொருவர் சண்டையிடுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை அனுதினமும் சந்தித்து வருகிறார்கள். இதற்கு நாகரீகம், கலாசாரம், கல்வி, நீதிபோதனைகள், பண்பாடு உள்ளிட்டவற்றால் மட்டுமே நலவழிப்படுத்தி தீர்வு காணமுடியும்.
இந்தியாவில் எல்லோருக்கும் ஒரே கடவுள் சிவன். மதத்தால், மொழியால் இந்தியர்கள் பிரிந்திருந்தாலும் அனைவரும் ஒரே குடும்பம்தான். இந்தியாவினுடைய ஆன்மிகம் தமிழகத்தில் இருந்து தொடங்கப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சாமிகள் பேசியதாவது:-
தமிழக கவர்னரின் பெயர் ரவி. ரவி என்றால் சூரியன். ஆளுகிற ஆட்சியாளர்களின் சின்னமும் சூரியனாக உள்ளதால், தமிழகத்தில் 2 சூரியன்கள் இருக்கின்றன. இதனால் தமிழகம் பிரகாசமாக உள்ளது.

மறதி ஒரு வரம். மறதி இருந்தால் மட்டுமே மனிதன் மகிழ்ச்சியாக வாழ முடியும். பசுக்களை பராமரிக்க வேண்டும். கால்நடைகளை சரியாக பராமரிக்காததால்தான் கொரோனா போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உள்ளோம். பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளை நீக்கியதால்தான் பண்பாடு, கலாசாரம் சீர்கெட்டுப்போய் உள்ளது. அதனால் கல்வி நிலையங்களில் மீண்டும் நீதி போதனை வகுப்புகளை தொடங்க வேண்டும்.

இதனைத்தொடர்ந்து தருமபுர ஆதீனம், தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கரம் விழாவில் பங்கேற்பதற்காக மேற்கொண்ட ஞானரத யாத்திரையை கவர்னர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், தருமபுரம் ஆதீன சிவாகம வேத பாடசாலை செயலாளர் ஆடிட்டர் குரு.சம்பத்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறைக்கு கவர்னர் வருகையை முன்னிட்டு திருச்சி சரக ஐ.ஜி., பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி தலைமையில் 1,850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %