0 0
Read Time:4 Minute, 16 Second

கடலூர், நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற பா.ம.க.வை சேர்ந்த செல்வி ஆடியபாதம் ஒன்றியக்குழு தலைவராகவும், அ.தி.மு.க.வை சேர்ந்த ஜான்சிமேரி துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஒன்றியக்குழு தலைவர் செல்வி ஆடியபாதம், துணை தலைவர் ஜான்சிமேரி ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றக்கோரி கடந்த மாதம் தி.மு.க. கவுன்சிலர் முத்துக்கண்ணு தலைமையிலான 13 கவுன்சிலர்கள் விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமாரிடம் மனு அளித்தனர்.

தொடர்ந்து கோட்டாட்சியர் தலைமையில் கடந்த 7-ந் தேதி நடந்த சிறப்பு கூட்டத்தில் தி.மு.க. தரப்பில் 13 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். ஆனால் ஒன்றியக்குழு தலைவர், துணை தலைவர் உள்பட 8 கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் ஒன்றியக்குழு தலைவருக்கு எதிராக 13 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இதில் ஒரு செல்லாத ஓட்டு பதிவானதாக கூறப்படுகிறது.

இருப்பினும் ஒன்றியக்குழு தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் முடிவு ஏதும் அன்று அறிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி தலைவர் மற்றும் துணை தலைவர் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் 5-ல் 4 பங்கு உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும். அதன்படி நல்லூர் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 21 உறுப்பினர்களில் 17 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். ஆனால் 13 உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டு வாக்களித்துள்ளனர். மேற்படி கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணை தலைவர் உள்பட 8 உறுப்பினர்கள் வரவில்லை.

மேற்படி தீர்மானம் குறித்த பதிவுகள் கூட்ட புத்தகத்தில் பதிவு செய்து உறுப்பினர்களுக்கு வாசித்து காண்பிக்கப்பட்டு, உறுப்பினர்களின் கையொப்பம் பெறப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி தீர்மானமானது, மேற்சொன்னவாறான பெரும்பான்மை வாயிலாக நிறைவேற்றப்படவில்லை என்றாலும், அக்கூட்டமான உட்பிரிவில் (13) கூறப்பட்டுள்ள குறைவெண் வரம்பு இல்லாததால் கூட்டம் நடத்த இயலாதிருக்குமாயின், அதே ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அல்லது துணை தலைவரிடம் நம்பிக்கை இல்லை என்பதை தெரிவிக்கின்ற தீர்மானம் பற்றிய அறிவிப்பு எதுவும், அந்த கூட்டத் தேதியில் இருந்து ஒரு வருடம் முடியும் வரை பெற்றுக்கொள்ள கூடாது.

எனவே, விதிமுறைகளின்படி நல்லூர் ஒன்றியக்குழு தொடர்ந்து செயல்படலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %