சென்னையில் கடந்த 11 நாட்களில் 55,885 பேர் மீது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக தொடரபட்ட வழக்கில் அபராத தொகையாக ரூ.1.42 கோடி வசூலிக்கப்பட்டதாக சென்னை போக்குவரத்து போலீசார் இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையில் மார்ச் 2018 முதல் போக்குவரத்து விதிமீறல் அபராத விதிப்பு பணமில்லா பரிவர்த்தனை முறைக்கு மாற்றப்பட்டது. ஆரம்ப கட்டங்களில் அபராதம் செலுத்துவது நன்றாக இருந்தபோதிலும், சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் பலர் அபராதம் செலுத்தாமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் அபராதம் செலுத்தாதவர்களை தொலைபேசி மூலம் அறிவுறுத்துவதற்காக சென்னையில் 10 அழைப்பு மையங்களை கமிஷனர் சங்கர் ஜிவால் கடந்த 11-ந்தேதி திறந்து வைத்தார்.
இந்த நிலையில் 11-ந்தேதி முதல் 21-ந்தேதி வரையிலான முதல் 11 நாட்களில் 10 அழைப்பு மையங்களில் மொத்தம் 2,389 தொலைபேசி அழைப்புகள் செய்து சாலை விதிகளை மீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள விதி மீறல்கள் குறித்து தெரிவித்ததுடன், அபராதத் தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.
அவ்வாறு செலுத்தவில்லை எனில் வழக்குகள் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த 11 நாட்களில் 55,885 வழக்குகளில் மொத்தம் ரூ.1 கோடியே 41 லட்சத்து 43 ஆயிரத்து 542 அபராத தொகையாக அரசு கணக்கில் பெறப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.