சீர்காழி, மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் அவருடைய உருவ சிலையும், பாரதியாரின் சிலையும் அடுத்த மாதம் (ஜூன்) 27-ந் தேதி வைக்கப்பட உள்ளது.
இதை முன்னிட்டு செல்லம்மாள், பாரதியார் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்த ரதம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு வந்தது. அப்போது சீர்காழி நகரசபை தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் துணைத்தலைவர் சுப்பராயன் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து சீர்காழி பகுதியில் உள்ள சபாநாயகம் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளுக்கு செல்லம்மாள், பாரதியார் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு மாணவ, மாணவிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளர் காதர் கான், பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி, உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் நகரசபை உறுப்பினர்கள் பாஸ்கரன், முபாரக் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.