கடலூர் சாவடி ஞானாம்பாள் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்தார். இவருடைய மகள் அவந்திகா (15). இவர் கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது நடந்து வரும் அரசு பொதுத்தேர்வை எழுதி வருகிறார். இந்நிலையில் சிவக்குமார் நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். மாணவி அவந்திகா தனது தந்தையின் உடலை பார்த்து கதறி அழுது கொண்டிருந்தார். அப்போது தேர்வுக்கு சென்று வந்த பிறகு, தந்தை உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறேன். அது வரை தந்தை உடலை அடக்கம் செய்ய வேண்டாம் என்று அவந்திகா தனது உறவினர்களிடம் கண்ணீர் மல்க தெரிவித்து உள்ளார்.
இதை கேட்ட உறவினர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து நன்றாக படிக்க வேண்டும் என்ற தனது தந்தையின் கனவை நிறைவேற்ற மனதில் உறுதி எடுத்துக்கொண்டு மாணவி அவந்திகா நேற்று பள்ளிக்கு சென்றார். அங்கு அவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து தந்தைக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினார். தந்தை இறந்த நிலையிலும், 10-ம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு வந்து, அவரது உடலுக்கு மாணவி அஞ்சலி செலுத்திய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.