0 0
Read Time:3 Minute, 51 Second

தமிழகத்தில் தி.மு.க. அரசு அமல்படுத்தி இருக்கும் மின் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட செயலாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

தமிழக அரசு மின்சாரக் கட்டணத்தை உயர்த்திய நிலையில், மாற்றி அமைக்கப்பட்ட மின் கட்டணம் கடந்த 10ஆம் தேதி அமலுக்கு வந்தது. முன்னதாக மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து மக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டங்களில், சுமார் 4,500-க்கும் மேற்பட்டோர் கட்டண உயர்வுக்கு எதிராக மனுக்கள் அளித்திருந்த நிலையிலும் மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. ஆணையம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

8 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

அவர் வெளியிட்ட அறிவிப்பில், “மின் கட்டணத்தையோ, பேருந்து கட்டணத்தையோ, பால் விலையையோ, உயர்த்தமாட்டோம் என்று சொல்லி ஆட்சியில் அமர்ந்தவர்கள், வாக்குறுதிகளை காற்றில் எழுதியதாக, உண்மைகளை தண்ணீரில் எழுதியதாகக் கருதி, தற்போது மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். ஏற்கனவே மிகப் பெரிய துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் தமிழக மக்களை, அவர்களுடைய தலையில் ஆயிரம் செந்தேள்கள் கொட்டியதைப் போல, கடுமையான துயரத்தையும், வலியையும் ஏற்படுத்துகின்ற விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்தும் என்பதையும் சொல்லி, மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்” என அதில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி, அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் செப்.16 (இன்று) காலை 10.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனக் அறிவிக்கப்பட்டது. அதன்படி பல்வேறு மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %