மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே கஞ்சாநகரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மனைவி தேவிகா (வயது32). நேற்று முன்தினம் காலை கணவருக்கு உணவு எடுத்து வைத்துள்ளார்.அப்போது இட்லிக்கு முதல் நாள் அரைத்து வைத்திருந்த சட்னியை எடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சுந்தரமூர்த்தி, தனது 12 வயது மகனை அழைத்து கொண்டு சாப்பிட ஓட்டலுக்கு சென்று விட்டார். இதனால் மனவேதனை அடைந்த தேவிகா வீட்டுக்குள் சென்று தனது புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சுந்தரமூர்த்தி கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேவிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நிருபர்: முரளிதரன், சீர்காழி.