0 0
Read Time:8 Minute, 33 Second

”தேர்தலில் உதயநிதிக்கு எதிராக சவுக்கு சங்கரை நிற்க வைப்பேன்” – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தேர்தலில் உதயநிதிக்கு எதிராக சவுக்கு சங்கரை என் கட்சியில், என் சின்னத்தில் நிற்க வைப்பேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது வீட்டில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் நேரில் சந்தித்தார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய சீமான், “இது ஒரு இயல்பான சந்திப்பு. அண்ணன் தம்பி சந்திப்பில் நோக்கமோ, காரணங்களோ இருக்க வேண்டிய அவசியமில்லை. ஜனநாயக நாட்டில் பேசுவது குற்றம் என்று சொல்ல முடியாது. பேசியதற்காக 2009-10 ஆண்டுகளில் நான் சிறை சென்றதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கருத்து சொல்வதற்கு சுதந்திரத்தை பெற்று தருவோம் என்று திராவிட தலைவர் அன்று கூறினர். ஆனால் நாங்கள் இப்போது சுதந்திரமாக பேச முடியவில்லை. ஆடிட்டர் குருமூர்த்தியை விடவா சவுக்கு சங்கர் பேசியுள்ளார்.

நாடெங்கிலும் எத்தனை லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆனால் அரசியல் தொடர்பான வழக்குகள் வரும்போது ராத்திரியோட ராத்திரியா கதவை திறந்து தீர்ப்பு சொல்கிறீர்கள்? அப்படியானால் அவை நீதிமன்றங்கள் அல்ல தீர்ப்பு மன்றங்கள். சவுக்கு சங்கர் என்னையும் விமர்சனம் செய்துள்ளார். அவற்றை நான் பாராட்டாகவே எடுத்துக்கொள்கிறேன். என் தம்பி என்னை விமர்சிப்பது எனக்கு வருத்தம் இல்லை.
பெருமையாக உள்ளது. அதிகாரத்தில் இருக்கும் காரணத்தினால் விமர்சிப்பவர்களின் குரல்வளையை நெரிக்கிறீர்கள். வேலையின்றி தவிக்கும் சங்கர் என்ன செய்வார். இதெல்லாம் திராவிட மாடல்.

சவுக்கு சங்கர் தனி ஆளாக இருக்கலாம். அவருக்கென்று ஒரு இயக்கம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இன்று முதல் அவருக்கு பக்கத்தில் நான் இருக்கிறேன். என் பின்னால் ஒரு மாபெரும் இயக்கம் உள்ளது. அதனால் இனி நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறு மீனாக நான் இருந்தபோது என்மீது அடிக்கடி வழக்குகள் போட்டனர். இப்போது பெரிய மீனாக மாறிய போது என்னை தொட பயப்படுகிறீர்கள். அஞ்சுவதும், அடிபணிவதும் நம் பரம்பரையில் கிடையாது. இது எங்கள் கோட்பாடு. என் மீது அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து நீதிமன்றங்களிலும் மொத்தமாக 125 வழக்குகள் உள்ளன.

நெய்தல் படை அமைப்பேன் என்று பேசியதால் நேற்று என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இதற்கு அஞ்சுபவன் நான் இல்லை. கச்சத்தீவை மீட்க சொன்ன நான் பிரிவினைவாதி. கொடுத்தவன் தேசியவாதி. துப்பாக்கி குண்டுக்கு நெஞ்சை காட்டி உயிர்விட்ட பரம்பரையில் வந்தவர்கள் நாங்கள். சவுக்கு சங்கரின் நீதிமன்றம் குறித்தான பேச்சு பிரச்னை இல்லை. G square நிறுவனம் பற்றி பேசியதே பிரச்னை. என் கருத்தும், சவுக்கு சங்கரின் கருதும் ஒன்று என்பதால் நான் அவருக்கு ஆதரவாக இருக்கிறேன். இன்று ஆயுதம் ஏந்திய புரட்சி இல்லை. கருத்தியல் புரட்சி தான் உள்ளது. நாங்கள் அடிமையாக இருக்க விரும்பவில்லை, அநீதியை எதிர்க்கிறோம். என்னுடைய ஆட்டோகிராப் போல் தற்போது சங்கரின் ஆட்டோகிராப்பை அரசு விரும்புகிறது.

பிறந்தநாள் வந்தால் தான் மக்களுக்கு நலத்திட்டம் வழங்குவீர்களா? TIMES OF INDIA நாளிதழில் பக்கத்திற்கு ஒரு கோடி வீதம் 18 பக்கத்திற்கு 18 கோடி ரூபாயில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. ஜுனியர் விகடனை விலைக்கு வாங்கிவிட்டீர்கள். நீங்கள் என்ன இயேசு கிறிஸ்துவா? நபிகள் நாயகமா? நீங்கள் பிறந்ததால் பூமியில் என்ன மாற்றம் நிகழ்ந்தது. உதயநிதிக்கு எதிராக சவுக்கு சங்கரை என் கட்சியில், என் சின்னத்தில் தேர்தலில் நிற்க வைப்பேன். அவர் சுயேட்சையாக நிற்க விருப்பப்பட்டால் ஆதரவளிப்பேன். ஊழல் குறித்து திமுக, அதிமுக ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சுமத்துவது, பேய்க்கும் பேய்க்கும் சண்டை என்பதுபோல் உள்ளது.

வன்முறை மீது தீராத காதல் கொண்ட மனநோயாளிகள் அல்ல நாங்கள். இந்நாட்டில் வரி கட்டும் ஒவ்வொரு குடிகமனுக்கும் கேள்வி கேட்க தகுதி உள்ளது. நான் பாஜக ஆள் இல்லை. ஸ்டாலின் தான் பாஜக ஆள். மோடிக்கு எதிராக கருப்பு குடை காட்ட முடிந்ததா உங்களால். எதிர்க்கட்சியாக இருக்கும்போது goback மோடி. ஆட்சிக்கு வந்த பின் welcome மோடி. மோடியை உங்களால் எதிர்க்க முடிந்ததா? அண்ணாமலை எதையாவது பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறார். பிரதமருக்கே பாழடைந்த கருவிகளைக் கொண்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது எந்த அளவில் நாடு இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆளுநர் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை செய்யாதது ஏன்? மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசிற்கு இல்லாத அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநருக்கு உள்ளதா?

சவுக்கு சங்கரும் நானும் இருவேறு பாதையில் பயணிக்கிறோம். கிஷோர் கே.சாமி, மாரிதாஸ் ஆகியோரின் கைதை நான் கண்டித்தேன். இது ஒரு ஜனநாயக மாண்பு. சங்கர் அவர் பாதையில் சுதந்திரமாக செயல்படுவார். என்னை எப்படி வேண்டுமானாலும் சங்கர் விமர்சிக்கலாம். காலம் வரும்போது நாங்கள் இணைந்து செயல்படுவோம். திமுக-வை தான் எதிர்க்கிறோம். பாஜக-வை ஆதரிக்கவில்லை. அதிமுக-வுடன் கூட்டணியில் இருக்கும்போது கூட பாஜக செயல்படவில்லை. பாஜக-வை திமுக எதிர்க்க துவங்கியவுடன் பாஜக-வின் செயல்பாடு அதிகரித்துள்ளது. யார் என்ன செய்தாலும் கருத்தை சொல்லிக்கொண்டே இரு என்று சவுக்கு சங்கருக்கு அறிவுரை கூறியுள்ளேன். நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுக-வில் இணைந்துள்ள ராஜிவ்காந்திக்கு, திமுகவில் பதவி கிடைத்திருப்பது மகிழ்ச்சி” என்று பேசினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %