வங்கக்கடலில் உருவாகவுள்ள மாண்டஸ் புயல், புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டாவுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்படுகின்றது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளது. இது இன்று மாலை புயலாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் தெரிவிக்கும்போது மேற்கு-வடமேற்கு திசையில் சென்னைக்கு 770 கி.மீ. தொலைவில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. இது இன்று மாலை புயலாக வலுப்பெறவுள்ளதாகவும் புதுச்சேரி – ஸ்ரீஹரி கோட்டாவுக்கு இடையே டிச. 9ஆம் தேதி இரவு புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது, டிசம்பர் 9 மாலை முதல் டிசம்பர் 10 காலை வரை 80 கி.மீ.
வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ள நிலையில் கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்படுகின்றது.
மேலும் கடலூரில் புயல் எச்சரிக்கை கொடி எண் 1 தொடரும் நிலையில் வானிலை மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து போலிஸார் கடற்கரை பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.