இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துகள், ஜூகிபா கதை திருட்டு வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறை முடக்கியது.
அமலாக்க இயக்குனரகம் (ED), சென்னை மண்டல அலுவலகம் பணமோசடி தடுப்புச் சட்டம் 2002 விதிகளின் கீழ், இயக்குநர் ஷங்கர் பெயரில் பதிவு செய்யப்பட்ட சுமார் ரூ. 10.11 கோடி மதிப்புள்ள மூன்று அசையாச் சொத்துக்களை தற்காலிகமாக முடக்கியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்தப் படம் எந்திரன். மிகப்பிரமாண்ட தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படம் உலகம் முழுக்க சுமார் ரூ. 290 கோடி வசூல் செய்தது. ஆனால், எந்திரன் படத்தின் கதை தன்னுடைய ‘ஜூகிபா’ புத்தகத்தின் கதை என அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2011ம் ஆண்டு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில், ஜூகிபா புத்தகத்தின் ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன், ‘எனது கதையைத் திருடி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இது காப்புரிமை சட்டம் 1957 மற்றும் ஐபிசி 1860 ஆகியவற்றை மீறிய குற்றம்’ எனத் தெரிவித்திருந்தார். ஆனால், இயக்குநர் ஷங்கரும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனும், ‘நாங்கள் கதையைத் திருடவில்லை. இந்த வழக்கு செல்லாது என்று உத்தரவிட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதற்கு இடைக்கால தடை விதித்தது. பின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதால் எழும்பூர் நீதிமன்றம் வழக்கை நடத்த உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து ஜூகிபா கதை ஆசிரியர் தொடர்ந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
அதேசமயம், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் சுயாதீன நிறுவனம், ஜூகிபா கதைக்கும் எந்திரன் படத்திற்கும் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன எனத் தெரிவித்தது. மேலும், கதை அமைத்தல், கதாபாத்திர வளர்ச்சி மற்றும் கருப்பொருள் கூறுகள் ஒற்றுமையாக இருந்ததாக அறிக்கை கொடுத்தது.
இந்நிலையில், ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் வழக்கைப் பதிவு செய்த அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. விசாரணையில், இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தின் கதை உருவாக்கம், திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்திற்காக சுமார் ரூ. 11.5 கோடி சம்பளமாக பெற்றிருப்பது தெரியவந்தது.
மேலும், இயக்குநர் ஷங்கர் காப்புரிமைச் சட்டப் பிரிவு 63-ஐ மீறியது சட்டவிரோத பணப் பரிமாற்றம் தடப்புச் சட்டம் 2002ன் கீழ் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருதப்படுகிறது. இதனால், அவரின் பெயரில் இருக்கும் சுமார் ரூ. 10.11 கோடி மதிப்புள்ள மூன்று அசையா சொத்துக்களை முடக்கியிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.