தமிழகத்தின் பாரம்பரிய கலைகளில் பொம்மலாட்டமும் ஒன்று. மன்னர்கள் காலம் தொட்டு இந்த கலைக்கு என்று தனி மதிப்பு உண்டு. திரைப்பட தாக்கம் அதிகரிக்க, அதிகரிக்க பொம்மலாட்டம், நாடகம், தெருக்கூத்துக்கள் படிப்படியாக மதிப்பை இழக்க தொடங்கின. ஆனாலும் பாரம்பரிய கலைகள் அழிந்து விடக்கூடாது என்ற நோக்கத்திலும், கலையின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாகவும் பொம்மலாட்டம், நாடகங்கள், தெருக்கூத்துக்கள் போன்ற கலைகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த கலைத்துறையினர் மிகவும் பாதித்து வறுமையில் வாடி வருகின்றனர்.மயிலாடுதுறையில் கொரோனா ஊரடங்கால் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக பொம்மலாட்ட கலைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொம்மலாட்ட கலைஞர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட பொம்மலாட்ட கலைஞர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிருபர்: யுவராஜ்