சேலம் வாழப்பாடி அருகே எடப்பட்டி சோதனைச்சாவடியில் போலீஸ் தாக்கியதில் காயமடைந்த வியாபாரி உயிரிழந்தார்.
நேற்று காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த வாழப்பாடி மளிகைக்கடை வியாபாரி முருகேசன் என்பவர், சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். போலீஸ் சோதனையின்போது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை பிடித்து விசாரிக்கும்போது காவல்துறையினர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
தற்போது கொரோனா தொற்று அதிகரித்துவருவதால் காவல்துறையினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணிகளை செய்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ளதால் தொற்று குறைவாக உள்ள தர்மபுரிக்கு சென்று மது வாங்கிவரும் சம்பவங்களும் நடக்கின்றன. இந்த சூழலில், நேற்று தர்மபுரி மாவட்ட எல்லைக்கு சென்ற வியாபாரி முருகேசன் என்பவர் அங்கு மது அருந்திவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வரும்போது எடப்பட்டி சோதனைச்சவடியில் காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது முருகேசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறப்பு காவல் உதவியாளர் பெரியசாமி லத்தியால் அவரை தாக்கியதாக சொல்லப்படுகிறது.
சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்த முருகேசன் நேற்று மாலை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின் தலையில் பலத்த காயமடைந்த முருகேசன் இன்று காலையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை சார்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.