0 0
Read Time:3 Minute, 11 Second

கடலூர் துறைமுகத்தில் வலைகள், படகுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், படகில் கடல் வழிப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட சில மீனவ கிராமங்களில் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். தமிழக அரசு இந்த வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கத் தடை விதித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்ட மீனவர்கள் இந்த வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க மாவட்ட நிர்வாகமும் தடை விதித்துக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 17-ம் தேதி சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி, தேவனாம்பட்டினத்தில், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 19-ம் தேதி தேவனாம்பட்டினம் மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி தேவனாம்பட்டினத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தேவனாம்பட்டினம் மீனவப் பெண்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர், மதியம் 1 மணியளவில் இக்கோரிக்கையை வலியுறுத்தி, கறுப்புக் கொடியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து, அவர்கள் மஞ்சக்குப்பம் நகராட்சி பூங்கா அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு வரை போராட்டம் தொடர்ந்தது. மீனவப் பெண்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

இந்த நிலையில், இன்று (ஜூலை 21) காலை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்சித் சிங், கடலூர் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர், கடலூர் துறைமுகத்துக்குச் சென்று அங்கிருந்த வலைகள், படகுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் படகில் கடல் வழியாக சிதம்பரம் அருகே பிச்சாவரத்துக்கு அருகில் உள்ள எம்ஜிஆர் திட்டு வரை சென்றனர். மழைக் காலங்களில் கடற்கரைப் பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, கடலூர் துறைமுகம் மற்றும் படகில் கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %