கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது, தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டன. இதையடுத்து கடந்த 2011-ம் ஆண்டு ஆரம்பத்தில் கடலூர் நகராட்சிக்குட்பட்ட செம்மண்டலம் பகுதி மக்களுக்கு வழங்கு வதற்காக 3,139 இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் கொண்டு வரப்பட்டு, செம்மண்டலம் குண்டுசாலையில் உள்ள பல்நோக்கு சமுதாய கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
தொடர்ந்து இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படுவதற்கு முன்பு 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, உடனடியாக நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனால் 3,139 இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை பொதுமக்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.இதற்கிடையில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. அதாவது 2011-2016, 2016-2021-ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது. இதனால் அந்த வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் சமுதாய நலக்கூடத்தில் வைத்து பூட்டி வைக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகள் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி யாருக்கும் பயன்படாமல் இருளில் மூழ்கி விடியலின்றி கிடந்தது.
தற்போது தி.மு.க. ஆட்சி நடந்து வரும் நிலையில் சமுதாய நலக்கூடத்தை திறந்து இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை விடுபட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். சமுதாய நலக்கூடத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது பற்றி கடந்த மாதம் 27-ந்தேதி தினத்தந்தி நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.மேலும் தினத்தந்தியில் கடந்த 31-ந்தேதி தலையங்கத்திலும் சுட்டிக்காட்டப்பட்டது. அதாவது ஆட்சி மாறினாலும் அவர்கள் செய்த நல்ல திட்டங்கள், சமூக நல உதவிகள் தொடர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சமுதாய நலக்கூடத்தை மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது.
தொடர்ந்து அந்த சமுதாய கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக நகராட்சி பொறியாளர் புண்ணியமூர்த்தி சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பல்நோக்கு சமுதாய நலக்கூடம், சுனாமி அவசர கால உதவித்திட்டம் 2005-2006-ம் ஆண்டு ரூ.12 லட்சம் செலவில் கட்டப்பட்டது.அதில் திருமணம், திருமண வரவேற்பு, மஞ்சள் நீராட்டு விழா, பிறந்த நாள் விழாக்கள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வைத்து கடந்த 10 ஆண்டுகளாக பூட்டி இருந்ததால், அந்த கட்டிடம் தற்போது பழுதாகி உள்ளது. சமுதாய நலக்கூடத்தில் உள்ள ஜன்னல்கள், கதவுகள் உடைத்து காணப்படுகிறது. அதை சுற்றிலும் முட்செடிகள், கொடிகள் படர்ந்து உள்ளது. இதை அகற்றி, கட்டிடங்களை புதுப்பிக்கும் பணிகளையும் நகராட்சி ஊழியர்கள் தொடங்கி உள்ளனர். ஓரிரு நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.