இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரை சந்தித்து நாகை மாவட்ட ஆட்சியர் ஆறுதல் தெரிவித்தார். நாகை மாவட்டம் அக்கரை பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் கலைச்செல்வன் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் திங்கள்கிழமை காலை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
தகவலறிந்த நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அ. அருண் தம்புராஜ் மருத்துவமனைக்குச் சென்று, மீனவர் கலைச்செல்வனை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு குறித்து தமிழக அரசிற்கு அறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைப்பதாக ஆட்சியர், மீனவர்களிடம் தெரிவித்தார். திமுகவினர் ஆறுதல்: முன்னதாக, நாகை மாவட்ட திமுக செயலாளர் என். கௌதமன், மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் மீனவர் கலைச்செல்வனுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.