12-ஆம் வகுப்பு தேர்வு துவக்கம்:மாநிலம் முழுதும் 350 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 14 மையங்களில் 1,500 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்!
தமிழக பள்ளிகளில் கடந்த ஆண்டில் படித்த மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. முந்தைய 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 செய்முறை மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது.இந்த மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்களுக்கும், தனி தேர்வர்களுக்கும் தனியாக பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு 39 ஆயிரத்து 600 பேர் விண்ணப்பித்தனர். அவர்கள் அனைவருக்கும் ‘ஹால் டிக்கெட்’ வழங்கப்பட்டுஉள்ளது. பிளஸ் 2 மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத 23 மாணவர்களும் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்த துணை தேர்வு நேற்று துவங்கியது. மாநிலம் முழுதும் 350 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 14 மையங்களில் 1,500 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். நேற்றைய தேர்வில் மாணவர்கள் சமூக இடைவெளிவிட்டு அமரும் வகையில், ஒரு பெஞ்சில் இரண்டு பேர் மட்டும் அமர வைக்கப்பட்டனர்.சமூக இடைவெளியை பின்பற்றுதல், சானிடைசரால் கைகளை கழுவி சுத்தம் செய்தல், உடல் வெப்பநிலை சோதனை உள்ளிட்ட கொரோனா விதிகளை பின்பற்றி, மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். வரும் 19ம் தேதி வரை தேர்வு நடக்க உள்ளது.