0 0
Read Time:3 Minute, 24 Second

பண்ருட்டி அருகே விஷம் கொடுத்து சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான வாலிபர் சிறையில் தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சின்னபேட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் ஆகாஷ் என்கிற பாண்டியன் (வயது 19). இவர் அந்த பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை ஒருதலையாக காதலித்துள்ளார். 

மேலும் சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி தொந்தரவு செய்து வந்த அவர், மிரட்டலும் விடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமி கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாண்டியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

இதில் ஜாமீனில் வெளியே வந்த அவர், மீண்டும் அந்த சிறுமியிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி உள்ளார். அதற்கு அவர் மறுத்தார்.  அப்போது, என்னை திருமணம் செய்யாவிட்டால், இந்த விஷத்தை குடித்து செத்துபோ என்று கூறி, விஷ பாட்டிலை சிறுமியிடம் கொடுத்தார். பாண்டியனின் தொந்தரவு தாங்க முடியாத அந்த சிறுமியும், விஷத்தை வாங்கி குடித்தார். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். 

 இதுகுறித்து, புதுப்பேட்டை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து பாண்டியனை கைது செய்தனர். தொடர்ந்து அவரை போலீசார் சிதம்பரம் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர். 
இந்நிலையில் நேற்று மதியம் பாண்டியன், சிறையில் உள்ள குளியல் அறைக்கு குளிக்க சென்றார். நீண்டநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, பாண்டியன்ட தான் அணிந்திருந்த கைலியால் கழுத்தை இறுக்கி கொண்டு தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்தார். 

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக  அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை சிகிச்சைக்காக  சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %