இந்தியாவிலேயே முழுமையாக தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல், அடுத்தாண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் வலிமை வாய்ந்த கடற்படைகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இந்நிலையில், அதற்கு மேலும் மகுடம் சேர்க்கும் வகையில், ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல், கடற்படையில் விரைவில் இணையவுள்ளது. கேரளாவின் கொச்சி துறைமுகத்தில் கட்டப்பட்ட இக்கப்பல், சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே கட்டப்பட்டது இந்த கப்பல். 40 ஆயிரம் டன் எடை கொண்ட இந்த அதிநவீன போர்க்கப்பல், 262 மீட்டர் நீளமும் 62 மீட்டர் அகலமும் கொண்டது. இதில், 1,700 மாலுமிகள் பயணிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஐஎன்எஸ் விக்கிரமாதித்தயா” என பெயர் சூட்டப்பட்ட, ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்ட ஒரேயொரு விமானந்தாங்கி போர்க்கப்பல் மட்டுமே இந்தியாவிடம் தற்போது உள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய கடற்படையில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட உள்ளது. இதனால், சொந்தமாக போர்க்கப்பல் தயாரிக்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைகிறது.