0 0
Read Time:5 Minute, 32 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்க மடிவலை எதிர்ப்பு மற்றும் சுருக்கமடி வலை ஆதரவு மீனவர்களிடையே ஏற்பட்டுவரும் பிரச்சனையை தவிர்க்க 1983ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள 21 சட்டங்களை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர் லலிதா கடந்த சில வாரங்களுக்கு முன்பு உத்தரவிட்டார். இதனைத்தொடாந்து குழு அமைத்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.  இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி பூம்புகார், திருமுல்லைவாசல், சந்திரபாடி கிராம மீனவர்கள் தடையை மீறி சுருக்குமடி வலையுடன் மீன்பிடிக்க 36 படகுகளில் கடலுக்கு சென்றனர். அதை எதிர்த்து தரங்கம்பாடி, வானகிரி உள்ளிட்ட பல்வேறு கிராம மீனவர்கள் பைபர் படகுகளில் சென்று அவர்களை  மறிக்க முயன்றனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் இருதரப்பு மீனவர்களையும் எச்சரித்ததன் பேரில் கரைக்கு திரும்பினர். கரை திரும்பும்  வழியில் வானகிரி கிராம கடல் பகுதியில் வானகிரி மீனவர்களின் பைபர் படகில் திருமுல்லைவாசல் மீனவர்கள் விசைப்பலகை கொண்டு மோதியதில் பைபர் படகு இரண்டு துண்டுகளாக உடைக்கப்பட்டதுடன், 3 மீனவர்கள் காயமடைந்து சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து வானகிரி படகுதுறையில் நிறுத்தப்பட்டிருந்த பூம்புகார் கிராமத்தை சேர்ந்த மூன்று பைபர் படகுகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர். இதனால் மீனவ கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் சுருக்குமடி வலைக்கு எதிரான தரங்கம்பாடி தலைமையிலான 20 மீனவ கிராம நிர்வாகிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் பைபர் படகை மோதிய விசைபடகை பறிமுதல் செய்ய வேண்டும், காயமடைந்த மீனவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும், தடைசெய்யப்பட்ட வலைகள், அதிவேக எஞ்சின் பொருத்தப்பட விசைப்படகுகள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வலியுறுத்தி வருகின்ற 20ஆம் தேதி வரை தொழில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது, தவறினால் 21ஆம் தேதி நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்ட மீனவர்கள் இணைந்து போராட்டம் நடத்தப்படும் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய மனுவை அளித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.

இதே போல் சுருக்குமடி வலையையை பயன்படுத்தும் பூம்புகார் தலைமையிலான மீனவ கிராம நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்தனர். அதில் கடந்த 14 ம் தேதி பூம்புகார் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றபோது, நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் தேவையின்றி, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் ஒற்றுமையை சீர்குலைத்து வன்முறையை தூண்டும் வகையில் சில கிராம மீனவர்களை தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்திவிட்டனர்.

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்திவிட்டு பூம்புகார் கடல் பகுதியில் நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் மட்டும் இரவு பகலாக தடைசெய்த வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வருகிறார்கள். உடனடியாக மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகத்துடன் பேசி நாகப்பட்டினம் மாவட்ட மீனவ கிராமங்கள் மயிலாடுதுறை மாவட்ட கிராம நிர்வாகத்தில் தலையிட வேண்டாம் என்று அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அப்படி நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் தலையிடும்பட்சத்தில் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு மாவட்ட நிர்வாகமே பொறுப்பு ஏற்று பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் இருதரப்பு மீனவர்களிடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %