ராஜ்யசபா தேர்தல்- திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டி!. முதல்வரும் அக்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழகத்தில் செப்டம்பர் 13-ந் தேதி நடைபெறும் ராஜ்யசபா இடைத் தேர்தலில் திமுகவின் வேட்பாளராக எம்.எம். அப்துல்லா போட்டியிடுவார் என்று முதல்வரும் அக்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதிமுக ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த முகமது ஜான் காலமானார். அதனால் தமிழகத்தில் ஒரு ராஜ்யசபா இடம் காலியாகி இருந்தது. இந்த இடத்துக்கு செப்டம்பர் 13-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தற்போதைய நிலையில் சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் ராஜ்யசபா இடைத்தேர்தலி திமுக எளிதாக வெற்றி பெறும். இதனால் அதிமுக வேட்பாளரை அறிவிக்குமா? என்கிற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் திமுகவின் வெளிநாடு வாழ் தமிழர் அணியின் இணை செயலாளரும் திமுக பொதுக்குழு உறுப்பினருமான புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா, ராஜ்யசபா தேர்தலுக்கான திமுக வேட்பாளராக போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.