தமிழ்நாடு அரசு அறிவித்த கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.. 4 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் இன்று திறக்கப்படுகின்றன.. கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு 4 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் அனுமதி தரப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு அதாவது, செப்டம்பர் 6ம் தேதி வரை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.. மேலும், சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அனைத்து கடைகளும் இதுவரை 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றுமுதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அமல்
அடுத்ததாக, தியேட்டர்களும் திறக்கப்படுகின்றன.. தியேட்டர் ஓனர்களும், பொதுமக்களும் நீண்டகாலமாகவே இதுகுறித்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.. 4 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் இன்று முதல் மறுபடியும் திறக்கப்படுகின்றன. 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தியேட்டர்கள்
அத்துடன், தியேட்டர் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, தியேட்டர்களில் நேற்றே இருக்கைகள், டிக்கெட் கவுண்ட்டர் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட தூய்மை பணிகள் மும்முரமாக நடந்தன… அதேபோல பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், நீச்சல் குளங்கள் (விளையாட்டு பயிற்சிக்கு மட்டும்), தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் பார்கள் போன்றவையும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.
பீச்கள்
இதையொட்டி நேற்றெல்லாம் மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் முழுவீச்சில் நடந்தன… மேலும் இதுவரை பீச்களில் நடைபயிற்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழு அனுமதி தரப்பட்டிருக்கிறது… அதன்படி, கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த கடற்கரைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன.
பொதுமக்கள் அத்துடன் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கு பொது போக்குவரத்து பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது… தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.. இந்த 4 மாத காலமாகவே பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையின்றி அவதிப்பட்டு வந்த நிலையில், நான்கு மாத காலத்துக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்படுவதால் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பூங்காக்கள், கடற்கரைகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளதால் பொதுமக்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்… கடைகளும் கூடுதல் நேரத்துடன் திறக்கப்படுவதால், நிம்மதி அடைந்துள்ளனர்.
source: ThatsTamil