14 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்ததாக உறவினர் இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கிராமத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி, தாய், தந்தையை இழந்த நிலையில், தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமியின் உறவினர்களான ராஜு (எ) ராஜ்பாய் (47) மற்றும் சிங்காரவேலு (57) ஆகிய இருவரும் சிறுமியை கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையடுத்து அந்த சிறுமி அவரது பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் தனக்கு நடந்த கொடுமைகளை கூறி உதவி கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் கடலூர் மாவட்ட சிறுவர் உதவி மையத்தை தொடர்பு கொண்டு சிறுமிக்கு நடந்த அநீதியை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சைல்டு ஹெல்ப் லைன் மூலம் உடல்ரீதியாகவும் ,மனரீதியாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு கடலூர் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சமூக நலத்துறை அதிகாரிகள் சிறுமிக்கு நடந்த வன்கொடுமையை மாவட்ட காவல் துறைக்கு தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் துறையினர், ராஜு மற்றும் சிங்காரவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.