கடந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. ஆனாலும், முக்கிய துறைகளின் தலைமையிடமாக நாகப்பட்டினம் விளங்கி வந்தது. இந்நிலையில் நாகப்பட்டினம் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறை கோட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி, மயிலாடுதுறை கோட்டம் புதிதாக உருவாக்கப்பட்டு கோட்ட பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை திருச்சிராப்பள்ளி மண்டல கண்காணிப்பு பொறியாளர் ஆர்.கிருஷ்ணசாமி, நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் திருச்சி மண்டல பொறியாளர் கிருஷ்ணசாமி, மயிலாடுதுறை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா எம்.முருகன், ராஜ்குமார், பன்னீர்செல்வம் ஆகியோர் மக்களுக்கு பலன் தரும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
நாகப்பட்டினம் கோட்ட பொறியாளர் கூடுதல் பொறுப்பாக மயிலாடுதுறை கோட்டத்தை கவனிப்பார் என்றும், அரசால் புதிதாக அலுவலர் விரைவில் நியமனம் செய்யப்படுவார் என்றும் திருச்சி மண்டல கண்காணிப்பு பொறியாளர கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஜி.என்.ரவி, நகர செயலாளர் செல்வராஜ், மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையபெருமாள், மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் மயிலாடுதுறை கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.