தமிழ்நாட்டின் வெள்ள சேத பாதிப்புகள் குறித்து முழுமையான ஆய்வுக்கு பிறகு அறிக்கை அளிக்கப்படும் என மழை வெள்ள பாதிப்பு குறித்து பார்வையிட வந்த மத்திய குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று சென்னை வந்தனர். தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட துறை அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய பின், ரிப்பன் மாளிகைக்கு சென்ற மத்திய குழுவினர், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கள் குறித்த புகைப்பட தொகுப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குழுவின் தலைவரும், மத்திய உள்துறை இணை செயலாளாருமான ராஜீவ் சர்மா, தங்களுடைய ஆய்வு பணியை தொடங்கியுள்ளதாகவும் விரிவான ஆய்வுக்கு பிறகு மத்திய அரசிடம் தங்களின் அறிக்கையை சமர்ப்பிப்போம் என்று தெரிவித்தார். அறிக்கையை சமர்ப்பிக்க கூடிய தேதி, ஆய்வினை முடித்த பிறகு தான் முடிவு செய்வோம் என்றும் கூறினார்.