கொள்ளிடம் அருகே புழுக்களுடன் இருந்த ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஓதவந்தான்குடி கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த மாதத்துக்கான பொருட்கள் இதுவரை வழங்கப்படாத நிலையில் குடியரசு தின விடுமுறை தினமான நேற்று கடை திறக்கப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டது.
அப்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட அரிசியில் வண்டுகளும், பழுப்பு நிற புழுக்களும் இருந்தன. இதை கண்டு விரக்தி அடைந்த கிராம மக்கள் அரிசியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாக இங்கு வழங்கப்படும் அரிசியில் வண்டுகள் காணப்படுகின்றன. இதை சமைத்து உண்ண முடியவில்லை. இங்கு பெரும்பாலும் விவசாய கூலி தொழிலாளர்களே வசித்து வருகிறார்கள். எனவே தரமான அரிசியை வழங்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்’ என்றனர். பொதுமக்களின் திடீர் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.