கடலூர் :சேத்தியாத்தோப்பில் வாலிபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மகன் சுகவனேஸ்வரன் (வயது 34). இவர் கடந்த 26-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் மீன்சுருட்டியில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமணத்துக்கு சென்றார். பின்னர் அங்கு திருமணம் முடிந்ததும் சுகவனேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் புறப்பட்டு நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது அவருடைய வீட்டின் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தது.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சுகவனேஸ்வரன் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, 2 பீரோக்களில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த 28 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணவில்லை. சுகவனேஸ்வரன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
போலீஸ் விசாரணை
இதுகுறித்த புகாரின்பேரில் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீடு மற்றும் அக்கம் பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டதோடு, நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இதனிடையே கடலூரில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவான மர்மநபர்களின் கைரேகைகளை சேகரித்தனர். மேலும் கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய் கூப்பர் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி மெயின்ரோடு வரை ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.