மயிலாடுதுறையில் ஷேர் ஆட்டோ வசதி வேண்டும்… மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ள அறிக்கையில்,
“மயிலாடுதுறை நகரம் எட்டு கிலோமீட்டர் சுற்றளவுடன், விரிந்து பரவி உள்ளது. குறிப்பாக பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையத்திற்கு செல்வதற்கும், சித்தர்காடு, மாப்படுகை, திருஇந்தளூர், சேந்தங்குடி, பேச்சாவடி,தருமபுரம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய நகர பகுதிகளுக்கும் அதனை ஒட்டிய நகர்களுக்கும் செல்வதற்கும், மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி, தருமபுரம் ஆதீனம் கல்லூரி, சித்தர்காடு ஏஆர்சி கல்லூரி, மூவலூர் ஏழுமலையான் ஐடிஐ மற்றும் கருவாட்டு சந்தை, பூம்புகார் சாலை பாலாஜி நகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், கலெக்டர் அலுவலகம், இந்துசமய துணை ஆணையர் அலுவலகம், எதிர்காலத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ள மணக்குடியில் அமைய உள்ள பேருந்து நிலையம், தரங்கை சாலையில் அமைய உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் நகரத்தின் 36வார்டுகளையும் உள்ளடக்கிய 300க்கும் மேற்பட்ட நகர் களுக்கும் செல்வதற்கும் இரு சக்கர, நான்கு சக்கர வாகன வசதி இல்லாதவர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள், சாதாரண நாட்களிலும் மழைக்காலங்களிலும் பெரும்பாலும் தங்களுடைய கல்வி மற்றும் மருத்துவ பணிகளுக்காக ஆட்டோக்களை நம்பியே உள்ளார்கள். இப்பகுதிகளை இணைப்பதற்காக அரசின் நகரபேருந்து வசதி இல்லாத காரணத்தினால், ஆட்டோக்களின் தேவை மிக அவசியமாகின்றது. இதனை பயன்படுத்திக் கொண்டு அதிக கட்டணத்தை ஆட்டோக்கள் வசூலிக்கிறார்கள்.
குறிப்பாக சிவப்பிரியா நகரிலிருந்து பேருந்து நிலையத்திற்கு ரூபாய் 150ம், ரயில்வே நிலையத்திற்கு ரூபாய் 250ம், வசூலிக்கிறார்கள். பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ரூபாய் 100, ஏவிசி கல்லூரிக்கு ரூ 300, என்று வசூலிக்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்ட தலைநகரம் ஆகிவிட்ட காரணத்தினால் மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனை குறித்து தனி கவனம் செலுத்தி ஏழை எளிய நடுத்தர மக்களின் கஷ்டங்களை உணர்ந்து உடனடியாக தமிழகத்தின் மற்ற அண்டை நகரங்களில் உள்ளது போல் ஷேர் ஆட்டோக்களுக்க அனுமதி வழங்கி மயிலாடுதுறை நகரம் முழுவதும் இயக்கிட முன்வரவேண்டும்.
அதன்மூலம் ஒரு பகுதியில் இருந்து பேருந்து நிலையத்திற்கும், ரயில்வே நிலையத்திற்கும் செல்வதற்கு ஆகின்ற பெரும் செலவும் நேர விரயமும் குறைந்து மயிலாடுதுறை மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். மக்களின் பொருளாதார கஷ்ட சூழலை உணர்ந்து மயிலாடுதுறையில் ஷேர் ஆட்டோக்களை அறிமுகம் செய்திட பொதுமக்கள் சார்பில் வேண்டுகின்றேன்”
என தெரிவித்துள்ளார்.