இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்து 757 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்போது தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று 85,579 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,310 ஆக உள்ளது.சென்னையில் மேலும் 296 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில், கொரோனா பரிசோதனை குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி புதிய திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் கொண்டவர்கள் கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், 60 வயதிற்கு மேற்பட்ட சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினை, உடல் பருமன் அதிகம் கொண்டவர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வருபவர்களில் 2 சதவீதம் பேருக்கு ரேண்டம் முறையில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.