சென்னை கீழ்ப்பாக்கம் 6-வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திரிஷா (26) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, பிறந்து 6 மாதமே ஆன ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
கடந்த சில நாட்களாகவே கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினமும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுரேஷ், தனது 6 மாத கைக்குழந்தையை தூக்கி தெருவில் வீசியதாக கூறப்படுகிறது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தையின் தலை மற்றும் கால் பகுதியில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பின்னர், குழந்தை மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதற்கிடையே சுரேஷ் துணி துவைக்க உபயோகப்படுத்தப்படும் ரசாயனத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.