கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் ராஜா மனைவி மீனா. இவர்களுக்கு 2 வயதில் முகேன் என்ற ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று முகேன் வீட்டு வாசலில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கு சுற்றித்திரிந்த பன்றி ஒன்று முகேனின் இடது கையை கடித்தது. இதில் வலியால் அவன் அலறி துடித்தான். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, பன்றியிடம் இருந்து முகேனை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். வீட்டு முன்பு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தையை பன்றி கடித்த சம்பவம் சிதம்பரம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சிதம்பரம் நகரில் பன்றிகள், நாய்கள், மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
எனவே சிதம்பரம் நகரில் சுற்றித்திரியும் பன்றிகள், நாய்கள், மாடுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.