0 0
Read Time:5 Minute, 19 Second

நியாயவிலைக் கடைகளில் சுமார் 4,000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் காலி பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிகளின்படி ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட
மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் மாவட்ட ஆட்சியரால் நியமனம் செய்யப்படும் ஒரு
வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளுக்கான விற்பனையாளர் மற்றும் கட்டுநர் தெரிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம் அமைக்கப்படும் விற்பனையாளர் மற்றும்
கட்டுநர் தெரிவிற்கான சரிபார்ப்புக் குழுவில் (Screening Committee) மாவட்ட
வழங்கல் அலுவலரால் நியமனம் செய்யப்படும் வட்ட வழங்கல் அலுவலரும்
உறுப்பினராகவுள்ளதால், அலுவலர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் சரிபார்ப்புக்
குழுவின் பணிகளில் முழுமனதோடு ஈடுபட்டு ஒத்துழைக்க ஏதுவாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சரிபார்ப்புப் பணிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான அலுவலர்கள் தேவைப்படுவார்கள் என்பதால், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக சம்மந்தப்பட்ட துறைகளின் மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னரான இத்தெரிவு நடவடிக்கைக்கு அதிக
எண்ணிக்கையிலான நபர்கள் விண்ணப்பிக்கக்கூடும் என்பதால், தெரிவு நடவடிக்கைகளை எவ்வித புகாருக்கும் இடமின்றி நடத்துவதற்கு ஏதுவாக மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசுத் துறைகளும் ஒத்துழைப்பும், உதவிகளும் நல்கிட வேண்டும் என்றும்,நேர்முகத் தேர்வு நடைபெறும் நாளில் நேர்முகத் தேர்வு மையத்திற்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்களை தகுந்த சான்றாவணங்களுடன் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்பட வேண்டும். தபாலிலோ அல்லது நேரடியாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையமானது பொது விநியோகத்திட்டத்தின் கீழ் தற்போது
காலிப்பணியிடம் ஏற்பட்ட நாளிலிருந்து பதிணைந்து நாட்களுக்குள்ளும் பின்னர்
ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு அத்தகைய காலிப்பணியிடம் ஏற்படக் கூடும்
நாளிலிருந்து தொண்ணூறு நாட்களுக்கு முன்னரும் காலிப்பணியிடங்களுக்கான
விவரங்களை எழுத்து மூலமாக சங்கங்களிலிருந்து பெற வேண்டும். மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையமானது அரசு பணியிடங்களுக்கு பின்பற்றப்படும் 200 புள்ளி இனச்சுழற்சி, இடஒதுக்கீட்டு விதிகள், முன்னுரிமை மற்றும் இதர நெறிமுறைகள் தொடர்பான நடைமுறையில் உள்ள அரசாணைகள், சட்டப் பிரிவுகள், விதிகள் ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

நியாய விலைக்கடை விற்பனையாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள்
பிளஸ்2 வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்றும், கட்டுநர் பணியிடத்திற்கு பள்ளி இறுதி வகுப்பு (SSLC) தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %