மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்
தரங்கம்பாடி,நவ.16: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தலைச்சங்காடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தரங்கம்பாடி வட்டத்தில் கடந்த 10,11,2022, 11,11,2022 ஆம் தேதிகளில் இரண்டு நாள் கனமழை பெய்தது. இதனால் சுமார் 30ஆயிரம் ஏக்கர் அளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஏராளமான வீடுகள் மழை நீர் சூழ்ந்தது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவரும் தமிழக முன்னாள் முதல்வரும்மான எடப்பாடி கே. பழனிச்சாமி தரங்கம்பாடி வட்டம் தலைச்சங்காடு பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாய விளைநிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார் .பின்னர் தலைச்சங்காடு தனியார் திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்ட 1350 குடும்ப ஆட்டைதாரர்களுக்கு அரிசி,புடவை, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருள்களை வழங்கினார்.
முன்னதாக விவசாயிகள் வயலில் இறங்கி அழுகிய பயிர்களை எடுத்துக் காண்பித்து நிவாரண உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இந்த ஆய்வின் போது முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். பவுன்ராஜ், பி.வி. பாரதி வி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு அழிந்துவிட்டது. போதைப்பொருள் தங்கு தடையின்றி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கிடைப்பதால், இளைய தலைமுறையினர் சீரழிந்து வருகின்றனர்.
2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி நிச்சயம் அமையும். இதில் அமமுகவுக்கு ஒருபோதும் இடம் கிடையாது.
தமிழகத்தில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் மழை வெள்ள பாதிப்புகளை பார்க்கச் சென்ற இடங்களில் எல்லாம் அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ யாரும் வந்து பார்க்கவில்லை என்று பொதுமக்கள் கண்ணீர் மல்க வேதனையை தெரிவித்துள்ளனர். உண்மையில் மு.க.ஸ்டாலின்தான் மகிழ்ச்சியாக உள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் மகிழ்ச்சியாக இல்லை.
சீர்காழி தாலுகாவில் திருவெண்காடு பகுதிக்கு வந்த முதல்வர் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் என்னிடம் மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும்
கடந்த 2021 ஜனவரி 16ஆம் தேதி அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 30,000 நிவாரணம் வழங்க வேண்டும் பழனிச்சாமி வழங்குவாரா என்று அறிக்கை வெளியிட்டார். அதனை சுட்டிக்காட்டி அப்போது எதிர்க்கட்சியாக இருந்தபோது கேள்வி எழுப்பிய ஸ்டாலின் தற்போது முதல்வராக உள்ள நிலையில் அதனை நிறைவேற்றுவாரா?
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது. கடலூர் மாவட்டம் பூவாளி குப்பத்தில் தமிழக அரசு முடக்கியதால் தற்போது பெய்த கன மழையில் 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது அடுத்த மழைக்குள்ளாவது அந்த திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். இதேபோல் பெருமாள் ஏரி தூர்வாரும் திட்டத்தையும் அரசு முடக்கி வைத்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தரங்கம்பாடி, சீர்காழி தாலுகாவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை, குத்தாலம் தாலுக்கா மக்களுக்கும் சேர்த்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3000 நிவாரணமாக வழங்க வேண்டும்.
10 நாட்களாக வேலை இல்லாததால் தினக்கூலி தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் இந்த தொகையை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
திருவாலி ஏரி உட்பட கடைமடை பகுதியில் உள்ள அனைத்து பாசன வடிகால் வாய்க்கால்களையும் தூர்வாரி மழை நீரை வடிய வைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகளை கொண்டு முறையாக கணக்கெடுத்து நிவாரண உதவிகளை அறிவிக்க வேண்டும் என்றார்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்