பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி காந்திநகரின் புறநகர்ப் பகுதியிலுள்ள ராய்சன் என்ற இடத்தில் தனது இளைய மகன் பங்கஜ் மோடியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும், பிரதமர் மோடி அகமதாபாத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தாயாரைப் பார்த்தார். அங்கிருந்த மருத்துவர்களிடம் தாயாரின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படுகிற சிகிச்சை குறித்தும் விசாரித்து அறிந்தார்.
இதையடுத்து அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், ஓரிரு நாளில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்.