அரசு தரப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் கடந்த 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி, நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ஆம் தேதி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் 3,170 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 3வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். அவர்களில் 50 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், கோரிக்கை நிறைவேறும் வரை, பின்வாங்க போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், தங்களது போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.