பிறை பார்க்க வேண்டிய நேற்று இரவு சென்னை உள்ளிட்ட இடங்களில் பிறை தென்படாததால் ரமலான் நோன்பு நாளை தொடங்குவதாக தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித மாதங்களின் ஒன்றான ரமலான் மாதம் உலகம் முழுக்க இன்று தொடங்கியது. பிறை பார்க்க வேண்டிய நாளான நேற்று இந்தியா முழுவதும் பரவலாக பிறை தெரியாத காரணத்தினால் நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் ஒரு மாதம் முழுக்க நோன்பு கடைபிடிப்பர். முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆன் இந்த மாதத்தில் தான் அருளப்பட்டது என்பதால் முஸ்லிம்கள் இந்த மாதத்தை புனித மாதமாக கருதி மாதம் முழுக்க நோன்பினை கடைபிடிப்பார்கள்.
ரமலான் மாதத்தின் பிறை பார்க்க வேண்டிய நாளான நேற்று பிறை குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முப்தி காஜி டாக்டர் சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது..
”ஹிஜ்ரி 1444 ஷாபான் மாதம் 29ம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 22-03-2023 தேதி அன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.
ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 24-03-2023 தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ” என தலைமை காஜி தெரிவித்துள்ளார்.
இதன்படி நாளை முதல் ரமலான் மாதத்தின் முதல் நோன்பு தொடங்குகிறது.