செம்பனார்கோயில், செப்-05:
தமிழ்நாடு முழுவதும் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-24ன் படி தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் மானிய விலையில் 5 ஆயிரம் பவர் டில்லர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் விவசாயிகளுக்கு பவர் டில்லர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 82 விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் வழங்கும் விழா செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வேளாண்மை இணை இயக்குனர் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், ஒன்றியக்குழு தலைவர்கள் நந்தினி ஸ்ரீதர், மகேந்திரன், வேளாண்மை விற்பனை துறை துணை இயக்குனர் வெற்றிவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் நிவேதா எம்.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பூம்புகார் சட்டமன்ற தொகுதி, சீர்காழி சட்டமன்ற தொகுதி, மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 82 விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லரை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர், விவசாயிகளின் நலன் கருதி செயல்படுத்தி வரும் எண்ணற்ற திட்டங்களில் சிறப்பான திட்டமாக தற்போது மானிய விலையில் பவர் டில்லர் வழங்கும் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெறுவர்.
மேலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை பிற மாநில முதல்வர்களும் செயல்படுத்த முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில் சிறப்பான திட்டமாக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுபோன்று முதலமைச்சரின் எண்ணற்ற திட்டங்கள் மூலம் பொதுமக்கள் அனைவரும் பயன்பெற்று வருவது தான் திராவிட மாடல் ஆட்சியாகும். இவ்வாறு பேசினார்.
விழாவில் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 25 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு, ரூ.2.12 லட்சம் மதிப்பிலான பவர் டில்லர் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ரூ.85 ஆயிரம் மானியத்தில், 37 பவர் டில்லர்கள் மொத்தம் ரூ.30.85 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டது.
விழாவில் உதவி பொறியாளர் கீர்த்திவாசன், திமுக தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப பணி பொறுப்பாளர் ஸ்ரீதர், மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் நிர்வாக குழு தலைவரும், மாவட்ட துணை செயலாளர் மு.ஞானவேலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.சித்திக், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.அன்பழகன், எம்.அப்துல் மாலிக், அமுர்த விஜயகுமார், ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன், காளகஸ்திநாதபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன் மற்றும் வேளாண்மை துறையினர், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்